
சமைக்க தேவையானவை
- துருவிய தேங்காய் – 1 கப்
- வெதுவெதுப்பான நீர் – 2 கப்
- வெல்லம் – 1/2 கப்
- நெய் – 3 டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
- முந்திரி – சிறிது
செய்முறை
முதலில் மிக்சர் ஜாரில் தேங்காயை போட்டு, ஒரு கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி பயன்படுத்தி, தேங்காய் பாலை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கப் கெட்டியான தேங்காய் பால் கிடைக்கும். இதை ஒன்றாம் பால் என்று கூறுவோம்.
பின்னர் வடிகட்டியில் உள்ள அரைத்த தேங்காயை மீண்டும் மிக்சர் ஜாரில் போட்டு, அதில் மீதமுள்ள ஒரு கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதையும் வடிகட்டியில் வடிகட்டி, ஒரு கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இரண்டாம் பால் என்று கூறுவோம்.
பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருக வைக்க வேண்டும். வெல்லம் நன்கு உருகியதும், அதை இறக்கி, வடிகட்டி பயன்படுத்தி வெல்லப்பாகுவை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு அந்த வடிகட்டி வெல்லப்பாகு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் ஒன்றாம் தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கிவிட வேண்டும். அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இறுதியாக ஒரு சிறிது வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து அதில் ஊற்றி கிளறினால், சுவையான ஆடி பால் அல்லது ஆடி தேங்காய் பால் தயார்.