
சமைக்க தேவையானவை
- மைதா மாவு – அரை கிலோ
- சீனி – 3 மேசைக்கரண்டி
- நெய் – 100 கிராம் + 50 கிராம்
- முட்டை – 2
- பால் – அரை கப்
- எண்ணெய் – பொரிப்பதற்கு
- உப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் நன்கு காய்ச்சிய சூடான நெய்யை ஊற்றவும். பிறகு கலக்கிய முட்டை, பால், சீனி மற்றும் உப்பு சேர்த்து பிசையவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பரோட்டா மாவை விட சற்று இறுக்கமாக பிசையவும்.
தண்ணீர் அதிகம் விடக்கூடாது. மாவை உருண்டைகளாக உருட்டி அதன்மேல் நெய் தடவி, மூடி போட்டு ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும்.பின்னர் அதிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து மெல்லியதாக தேய்க்கவும்.
அதன் இருபுறமும் நெய் தடவவும்.அதன்மீது மாவைத் தூவி முன்னும், பின்னுமாக (விசிறி போல்) மடிக்கவும். மடிப்பின் இடைக்கிடையே நன்கு மாவு தூவி பரோட்டா போல் சுருட்டவும்.மீதமுள்ள உருண்டைகளையும் இதேபோல் தயார் செய்து, அதன்மேல் நெய் தடவி வைக்கவும்.
சுருட்டிய பரோட்டாக்களை மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல், மொத்தமாகவும் இல்லாமல் தேய்க்கவும். மீண்டும் இருபுறமும் நெய் தடவவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு தீயில் வைத்து பரோட்டாக்களை ஒவ்வொன்றாகப் பொரித்தெடுக்கவும்.சுவையான, மொறு மொறுப்பான பொரித்த பரோட்டா ரெடி. காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.