
சமைக்க தேவையானவை
- காளான் – 2 பாக்கெட்
- பூண்டு – 5 பற்கள்
- இஞ்சி – சிறு துண்டு
- சின்ன வெங்காயம் – 5
- தக்காளி – ஒன்று
- தேங்காய் – 2 துண்டுகள்
- கறிவேப்பிலை, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப
- எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
- கடுகு – சிறிது
- மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
- மல்லித் தூள் – அரை தேக்கரண்டி
அரைக்க தேவையானவை
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- மல்லி விதை – ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 2
- சோம்பு – சிறிது
- மிளகு – அரை தேக்கரண்டி
- பொட்டுக்கடலை – ஒரு தேக்கரண்டி
- அரிசி – ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 4 இணுக்கு
- சின்ன வெங்காயம் – கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். காளானை சுத்தமாகக் கழுவி துடைத்து நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை நசுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து ஆறவைக்கவும்.
பின் ஆறியதும் அதனுடன் தேங்காய் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் காளானைச் சேர்த்து வதக்கி, மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும்.
காளான் நீர்விடத் தொடங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு பிரட்டவும். பச்சை வாசனை போனதும் தேவையான அளவு நீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும். சுவையான காளான் குழம்பு தயார்.