
சமைக்க தேவையானவை
- சிக்கன் – 300 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
- தயிர் – 1/2 கப்
- சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
- பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கியது)
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- உலர்ந்த வெந்தய கீரை – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- மசாலா கிரேவிக்கு
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- முந்திரி – 5
- சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
- கிராம்பு – 1
- பட்டைத் தூள் – 1/4 டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
- பிரஷ் க்ரீம் – 1/2 கப்
- வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் கழுவிய சிக்கனை எடுத்துக் கொண்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள தயிர், சீரகப் பொடி, மல்லித் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், உலர்ந்த வெந்தயக் கீரை மற்றும் உப்பை சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு ஊறியதும், ஒரு பேனில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு 8 நிமிடம் நன்கு மென்மையாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக சிக்கனை வேக வைத்துவிட வேண்டாம். பின் சிக்கன் மிகவும் கடினமாகவும், ரப்பர் போன்றும் ஆகிவிடும். முக்கியமாக சிக்கனில் நீர் சேர்க்காதீர்கள்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். பின் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, முந்திரியை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும். இந்த கலவையை நன்கு குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், கிராம்பு, பட்டைத் தூள், ஏலக்காய் பொடி சேர்த்து தாளித்து, பின் சீரகப் பொடி, மல்லித் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து சில நிமிடங்கள் கிளற வேண்டும். பின்பு உலர்ந்த வெந்தயக் கீரையை கையால் நசுக்கி மேலே தூவி விட வேண்டும். இப்போது அந்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். வேண்டுமானால் உங்களுக்கு தேவையான அளவு நீரை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியில் மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சிக்கன் டிக்கா மசாலா தயார்.