
சமைக்க தேவையானவை
- பச்சரிசி – 1 கப்
- ஜவ்வரிசி – 1 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் – 1/4 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- ஏலக்காய் – 2
- உப்பு – 1 சிட்டிகை
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் ஜவ்வரிசியை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். * பின் நன்கு கழுவி நீரை வடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை மிக்ஸியில் போட்டு 1/4 கப் நீர் சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்த பின் தண்ணீர் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால் அதிக நீராகி நன்றாக வராமல் போய்விடும். பின்பு அரைத்த மாவை ஒரு பௌலில் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். மாவானது தோவை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு (சற்று தாராளமாக) எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். அடுத்து ஒரு கரண்டி மாவு எடுத்து, எண்ணெயில் மெதுவாக ஊற்றுங்கள். பின் அதன் மேல் எண்ணெயை லேசாக ஊற்றிவிடுங்கள். பணியாரத்தின் முனைகள் பென்னிறமாக மொறுமொவென்று மாறும் போது எடுங்கள். இப்படி மீதமுள்ள மாவை ஊற்றி எடுத்தால், சுவையான செட்டிநாடு சீனி பணியாரம் தயார்.