
சமைக்க தேவையானவை
- சேமியா – 2 கப்
- மஞ்சள் தூள் – சிறிது
- ரவை – 1/2 கப்
- பச்சைப் பருப்பு – 1/2 கப்
- உப்பு – தேவைக்கு
தாளிக்க
- நெய் – 2 டீஸ்பூன்
- முந்திரி – 10
- சீரகம் – 1 டீஸ்பூன்
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு
- மிளகு -1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை
முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் சேமியாவையும்,ரவையையும் தனித்தனியாக சூடு வர வறுத்துக்கொள்ளவும். அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து, ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு கொதி நிலை வரும்வரை மூடி வைக்கவும்.
பின்பு பச்சைப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றவேண்டாம்.தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.
மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவை கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து ,கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.
சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.
இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.இப்போது சேமியா பொங்கல் சாப்பிடத் தயாராக உள்ளது. பரிமாறவும்