
சமைக்க தேவையானவை
- தூதுவளை இலைகள் – 1 கையளவு
- நெய் – 1 டீஸ்பூன்
- புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
- தக்காளி – 1-2 (பொடியாக நறுக்கியது)
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பூண்டு – 3 பல்
- சாம்பார் பவுடர் – 3/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – சுவைக்கேற்ப தாளிப்பதற்கு
- கடுகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் தூதுவளை இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் புளியை ஒரு கப் சுடுநீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், தூதுவளை இலைகளைப் போட்டு, நன்கு வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து, அதன் பின் வதக்கிய தூதுவளை இலைகளைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் புளிச்சாறு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பவுடர், கறிவேப்பிலை மற்றும் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து, ஒருமுறை நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதனால் புளியின் பச்சை வாசனை போய்விடும்.
பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, ரசத்தின் மேலே நுரை கட்ட ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும். இறுதியில் அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி விட வேண்டும். இப்போது மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, ரசத்தில் ஊற்றினால், சுவையான மற்றும் சத்தான தூதுவளை ரசம் தயார்.