
சமைக்க தேவையானவை
- துவரம் பருப்பு – 1/4 கப்
- கடலைப் பருப்பு – 1/4 கப்
- பாசிப் பருப்பு – 1/4 கப்
- புழுங்கல் அரிசி – 1/4 கப்
- உப்பு – 1/8 டீஸ்பூன்
- சர்க்கரை – 3/4 – 1 கப்
- துருவிய தேங்காய் – 2-3 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் பவுடர் – 1/2 டீஸ்பூன்
- முந்திரி – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அனைத்து பருப்புக்களையும், அரிசியையும் நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசி மற்றும் பருப்புக்களை நன்கு கழுவி, மிக்சர் ஜாரில் போட்டு, உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள மாவை இட்லி குழியில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வெந்துள்ள பருப்பு இட்லியை நீர் தெளித்து எடுத்து, புட்டு போன்று உதிர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும். மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி, முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் வேக வைத்து உதிர்த்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் பவுடர் மற்றும் வறுத்த முந்திரியையும் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் கிளறி விட்டு இறக்கினால், சுவையான பருப்பு புட்டு தயார்.
குறிப்பு:புட்டில் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம். புட்டு தயாரித்த உடனே சூடாக சாப்பிடாமல், சற்று குளிர்ந்த பின் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், அது பிசுபிசுப்பாக இருக்கும். சர்க்கரை பாகுவில் புட்டு சேர்த்ததும் ஒரு நிமிடத்திற்கு மேலே அடுப்பில் வைக்க வேண்டாம். இல்லாவிட்டால், அது கடினமாகிவிடும்.