
சமைக்க தேவையானவை
- பச்சை பயறு/பாசி பயறு – 1/2 கப்
- தேங்காய் மசாலாவிற்கு…
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- வரமிளகாய் – 2
- புளி பேட் – 1/4 டீபூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டீபூன்
- கடுகு – 1 டீபூன்
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் பச்சை பயறு அல்லது பாசி பயறை நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் அதை நன்கு நீரில் கழுவி, ஒரு ஈரமான துணியில் போட்டு கட்டி தொங்க விடவும். மறுநாள் பாசி பயறு முளைக்கட்டியிருக்கும். இப்போது அதை மீண்டும் நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் முளைக்கட்டிய பச்சை பயறை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். அதே சமயம் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய் மற்றும் புளியைப் போட்டு சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை குக்கரில் உள்ள முளைக்கட்டிய பச்சை பயறுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கிரேவியுடன் சேர்த்து கிளறினால், முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி தயார்.